துப்பாக்கிக் குண்டுகளை விட வாக்குகள் வலிமையானவை...: காஷ்மீரில் மோடி பிரச்சாரம்
ஸ்ரீநகர் : தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு சம்பா மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ‘இத்தேர்தலால் காஷ்மீரில் பெரும் மாற்றம் உருவாக வேண்டும்' என விருப்பம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உட்பட 11 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, நாளை காஷ்மீரில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காஷ்மீர் தேர்தலை ஒட்டி, முன்னதாக திட்டமிட்டபடி இன்று ஸ்ரீநகரில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், இந்த பயணத்தின்போது கடந்த வெள்ளிகிழமை தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மோடி ராணுவத்தின் பதாமி பாக் தலைமையகத்திற்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் சென்ற மோடி, சம்பாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-
இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, இந்த தேர்தல் காஷ்மீரில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. காஷ்மீர் மாநில மக்கள், வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு, அடிப்படைவசதிகள் ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும்.
இளைஞர்கள் வேலை கேட்கின்றனர். விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கேட்கின்றனர். குழந்தைகள் நல்ல கல்வியை கேட்கின்றன. வயதானவர்கள் நல்ல மருத்துவ கவனிப்பு தேவை என்கின்றனர்.
எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் பிரச்னைகளை தீர்க்கப்பட்டு வருகின்றன. அப்பா, மகன் அல்லது அப்பா, மகள் என்று தான் காஷ்மீரை ஆண்டு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்ததில்லை. அவர்களுக்கு இந்த முறை ஓட்டு போடாதீர்கள். துப்பாக்கிக் குண்டுகளை விட வாக்குகள் வலிமையானவை' என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.