"மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றலாம் வாருங்கள்.." குஜராத்தில் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்ட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி இரு நாள் பயணமாக அங்குச் சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியானது. இதில் உபி, உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை பாஜகவினர் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

குஜராத்
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் குஜராத் பாஜக தலைமை அலுவலகம் வரை அவர் பேரணி நடத்தினார். அப்போது அவர் அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் நடைபெற்ற மகா-பஞ்சாயத்துச் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் அவர் உரையாடினார்.

காந்தியின் கனவு
அங்குப் பேசிய பிரதமர் மோடி, "குஜராத் மாநிலம் காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் மண். கிராமப்புற வளர்ச்சி, சுயசார்பு கிராமங்களை உருவாக்குவதே காந்தியின் நோக்கம். இன்று, 'அமிர்த மஹோத்சவ்' கொண்டாடப்படும் நிலையில், காந்தியின் 'கிராமீன் விகாஸ்' கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். கிராம சுயராஜ்ஜியத்தின் கனவை நிறைவேற்றப் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மிகவும் முக்கியமானது. இந்த அமைப்புக்கு வழிகாட்டும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்கிறார்கள்.

கிராம சுயராஜ்ஜியம்
அப்போது தான் கிராம சுயராஜ்ஜியம் நினைவு அடையும். குஜராத்தில் பஞ்சாயத்து அமைப்பில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் இடம் பெறுகின்றனர். குஜராத்தில் தற்போது 1.5 லட்சம் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குஜராத்திற்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க பணியாற்ற வேண்டும். இதைவிடப் பெரிய வாய்ப்பு எதுவும் இருக்க முடியாது, ஜனநாயகத்தில் இதைவிட பெரிய சக்தி வேறு எதுவும் இருக்க முடியாது" என்றார்.

குஜராத் தேர்தல்
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாயார் உடன் சந்திப்பு
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் மோடி குஜராத் பாஜக நிர்வாகிகள் உடனும் ஆலோசனை நடத்தினார். குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள அவரது தாயார் ஹீராபென் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். பிரதமர் மோடி தனது தாயுடன் இரவு உணவு சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications