"மன்மோகன்சிங்"கை கேலி செய்ததால் ப்ளாக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மீண்டும் இணைப்பு!!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சனம் செய்ததாக முடக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை மறுபடியும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. மற்றொரு சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பிறரை புண்படுத்தும் விதத்தில் விமர்சனம் செய்வதில் இந்தியர்கள்தான் உலகிலேயே டாப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் இம்முடிவை எடுத்துள்ளது.
கேலிக்கு உள்ளான மன்மோகன்
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்தபோது, மீடியா ஆலோசகர் பங்கஜ் பச்சோரி தலைமையிலான குழு, மன்மோகனை கடுமையாக விமர்சனம் செய்த ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்கியது. சுமார் பத்தாயிரம் அக்கவுண்டுகள் இதுபோல முடக்கப்பட்டன.
முடக்கத்தை நீக்க கோரிக்கை
மோடி பிரதமராக தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில் மன்மோகன் பயன்படுத்திய அதே பெயரிலான ட்விட்டரைத்தான் பயன்படுத்தி வருகிறார். எனவே மோடியுடன் தொடர்பில் இருக்க விரும்பும் முடக்கப்பட்ட கீச்சர்கள், அதை நீக்குமாறு மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இதுவரை நாலாயிரம் பேர் அதுபோன்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுவிப்பு பணி தொடக்கம்
எனவே முடக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மோடியின் மீடியா குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இரண்டாயிரம் அக்கவுண்டுகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில் எஞ்சியவையும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
பேஸ்புக் சொல்வதென்ன?
2013ம் ஆண்டுக்கான வெளிப்படை அறிக்கையை தாக்கல் செய்த பேஸ்புக், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதிலும், சமூக வலைத்தளம் மூலம் பிறரை புண்படுத்துவதிலும், உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது.
ஐயாயிரம் மடங்கு மோசம்
பிற நாடுகளை ஒப்பிட்டால் இது சுமார் ஐயாயிரம் மடங்கு அதிகம். துருக்கி நாடு இதில் 2ம் இடத்திலுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விவாதம் நடத்துக்கள், ஆனால் கண்ணியத்தோடு என்பதே இந்த சம்பவங்கள் கூறும் பாடம்.