போர்வைகளை துவைப்பதில்லை, உரிய நேரத்திற்கு வருவதில்லை.. ரயில்வே துறையை விட்டு விளாசிய சி.ஏ.ஜி அறிக்கை
டெல்லி: பல மாதங்களாக துவைக்காத போர்வைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
ரயில் உள்ளே வழங்கப்படும் பால், ஜூஸ், சான்ட்விஜ், பிஸ்கட்டுகள் மற்றும் பிற ஸ்நாக்குகள் குறைந்தபட்ச தூய்மை அளவை கூட பூர்த்தி செய்யாதவையாக உள்ளன. 80 ரயில்கள், 74 ரயில்வே நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தூய்மை குறைவு
கேட்டரிங் யூனிட்டுகளிலும் தூய்மை மிக குறைவாகவே உள்ளது. 11 ரயில்வே மண்டலங்களிலுள்ள 21 ரயில்வே நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. மாசடைந்த தண்ணீரில்தான் காபி, டீ போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 22 ரயில்களில் இவ்வாறு தூய்மையற்ற உணவுகள் பிடிபட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்
விரைவு ரயில்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் அவையும் கூட உரிய நேரத்தில் ஊர்களுக்கு செல்வதில்லை. சூப்பர் பார்ஸ்ட் ரயில்கள் என்ற பெயரில் ரயில்வே கூடுதலாக வசூலிக்கும் தொகை ரூ.11.17 கோடி. ஆனாலும் வேகத்தில் ரயில்வே கவனம் வைக்கவில்லை. சில சூப்பர் பார்ஸ்ட் ரயில்கள் 95 சதவீத நாட்கள் தாமதமாகத்தான் பயணித்துள்ளன.

போர்வைகளை துவைப்பதில்லை
பல மாதங்களாக துவைக்காத போர்வைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரயில்வே உருவாக்கிய விதிமுறைப்படி கூட போர்வைகள் துவைக்கப்படவில்லை. ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் போர்வைகளை மாற்ற வேண்டும் என்ற விதிமுறை இருப்பினும், எப்போதும் அப்படி செ்யப்படுவதில்லை.

தாமதம்
டீசல் ரயில்களைவிட மின்சார ரயில்களை இயக்குவது செலவு குறைவு. எனவேதான் பல மார்க்கங்களில் ரயில்சேவை மின்சாரமயமாக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வேக்கு செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications