ஆந்திரா பெண் அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு பீதி ஏற்படுத்திய பையில் ரூ. 10 லட்சம்- லஞ்சப் பணமா?
ஹைதராபாத்: ஆந்திரா மாநில பெண் அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு பீதி ஏற்படுத்திய பையில் ரூ10 லட்சம் பணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் லஞ்சப் பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பீதாலா சுஜாதா. மேற்கு கோதாவரி மாவட்டம் வீரவாகரம் என்ற ஊரில் இவரது வீடு உள்ளது.
இன்று காலை அவரது வீட்டில் பை ஒன்று கேட்பாறின்றி கிடந்தது. இதனால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று வீட்டில் இருந்தவர்கள் பெரிதும் பதற்றம் அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி அந்த பையைத் திறந்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மையில் தெலுங்கானாவில் எம்.எல்.சி. தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற தெலுங்குதேச எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில் ஆந்திரா அமைச்சர் வீட்டில் கட்டு கட்டாக பணத்துடன் பை கண்டெடுக்கப்பட்டது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சற்றுநேரத்தில் அங்கு வந்த வயதான பாட்டி, பணம் தன்னுடையது என்று கூறினார். இருப்பினும் அப்பையில் ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டும் இடம்பெற்று இருந்தது. இதனால் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பபட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.