டெல்லி, ஹரித்துவாரில் மதனைத் தேடும் போலீசார்!
டெல்லி: டெல்லி, ஹரித்துவார் மற்றும் இமயமலைப் பகுதிகளில் மதனைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர் போலீசார்.
வாரணாசி கங்கையில் சமாதி ஆகிறேன் என்று தற்கொலைக் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான மதன் குறித்து கடந்த 9 நாட்களாக எந்தத் தகவலும் இல்லை.
மதன் திடீரென காணாமல் போனது குறித்து அவரது 2 மனைவிகளும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் மதன் மீது பணமோசடி புகார்களும் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது. எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு இது வரையில் வாங்கி தரவில்லை என்றும் ஒருபுறம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில் வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்.ஆர்.எம் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்லூரி சீட் தொடர்பாக அவரிடம் இருந்து பணம் எதுவும் பெறப்படவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதனின் பெற்றோர் பாலகிருஷ்ணன்- தங்கம் மற்றும் மனைவி சுமலதா ஆகியோர் மதனை கண்டு பிடித்து தருமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று இதுவரை எந்த தவகலும் கிடைக்காததால் மதனை கண்டு பிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, காசி செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மதன், டெல்லி சென்று தங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரித்து வருகின்றனர்.
ஹரித்துவார் உள்ளிட்ட இமயமலைப் பகுதியில் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தங்கியிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
காசியிலும் அவரைத் தேடும் பணி தொடர்வதாகத் தெரிகிறது. மதன் பயன்படுத்திய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியான அனைத்துமே யூகத் தகவல்களே. எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.