லாரியை திறந்து பார்த்தால் அதிர்ச்சி.. குவியல் குவியலாக சிக்கிய போதைப்பொருட்கள்.. ரூ.136 கோடி! எங்கு?
கவுஹாத்தி: அசாமில் ரூ.136 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அசாம் மாநிலத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட விலை உயர்ந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

அசாம் போலீஸ்
இதனை தடுக்க கடந்த ஆண்டு மே மாதம் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து நடவடிக்கையில் இறங்கியது அசாம் மாநில காவல்துறை. இதுவரை நடத்தப்பட்ட சோதனை மற்றும் தேடுதல் வேட்டைகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4052 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். ரூ.427 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ரெய்டு
இதனிடையே அசாம் மாநிலத்தின் சொனாபூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்குள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரி
அந்த லாரியை தடுத்து நிறுத்திய போலீசார், மணிப்பூரை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் 4.6 லட்சம் யபா மாத்திரைகள், 12 கிலோ மெதம்பெடாமைன் என்ற போதைப் பொருள், 1.5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் மணிப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அதன் மதிப்பு ரூ.136 கோடி என தெரிவித்து இருக்கின்றனர்.

நடவடிக்கை
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "விவேகானந்த தாஸ், நபஜித் நாத் தலைமையிலான போலீசார் மாபெரும் பணியை செய்துள்ளனர். அசாம் போலீசுக்கு கிடைத்த வெற்றி இது. போலீசார் இதுபோல் என்றும் பணியாற்ற வேண்டும்" எனக்குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications