பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடம்னா ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்கலாமா? உ.பி. பேராசிரியருக்கு நேர்ந்த கதி!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில மீரட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சீமா பன்வார், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து வினாத்தாளுக்கான கேள்வி தயாரித்ததால் 'வாழ்நாள் தடை' விதித்துள்ளது ஆளும் பாஜக அரசு. அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து கேள்வி இடம் பெறச் செய்தது மிகப் பெரிய குற்றம் என பாஜகவின் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சீமா பன்வாருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது உ.பி. மாநில ஆளும் பாஜக அரசு.
உ.பி. மாநில மீரட் பல்கலைக் கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் 2-வது செமஸ்டர் தேர்வுகள் கடந்த 2-ந் தேதி நடைபெற்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த கேள்வி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சிப்பதாக இருக்கிறது என குற்றம்சாட்டியது பாஜக. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், இந்த வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் சீமா பன்வாருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசியல் அறிவியல் பாடம் என்பதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து கேள்வி தயாரிக்கப்பட்டதே தவிர தமக்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என சீமா பன்வார் விளக்கம் அளித்தார். ஆனாலும் உ.பி. மாநில அரசு இதனை ஏற்கவில்லை.
தற்போது பேராசிரியர் சீமா பன்வாருக்கு வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட அனைத்து தேர்வு சார்ந்த பணிகளுக்கும் 'வாழ்நாள் தடை' விதித்து அதிர்ச்சி உத்தரவை உ.பி. மாநில அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உ.பி. அரசின் விளக்கத்தில், வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து மட்டுமல்ல மாவோயிஸ்டுகள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றிருந்தன; இதுதான் சர்ச்சைக்கு காரணம்; ஆகையால் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க சீமா பன்வாருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications