100 ஏக்கர் நிலம், ஆடி கார் வைத்திருப்பதாக அவமானப்படுத்துகிறார்களே- டெல்லியில் கதறியழுத அய்யாக்கண்ணு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் சாப்பிடுவதற்கு குருத்வாரில் பிச்சை எடுத்து சாப்பிடுவதாகச் சொன்னது அனைவரையும் கலங்க வைத்தது.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் 22ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து, சோறு தின்கிறோம் என அய்யாக்கண்ணு தழுதழுக்கும் குரலுடன் கூறியது காண்போரை அழச் செய்தது.
தமிழக விவசாயிகள், வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 22 ஆவது நாளாக நடுரோட்டில் வெயிலில் அமர்ந்து போராடி வருகின்றனர். இன்று விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றம், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணுவிடம் செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது செய்தியாளர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு 'பிச்சை எடுத்துத்தான் சோறு தின்கிறோம்' என அவர் தழுதழுத்த குரலில் பதில் சொன்னது காண்பவர் கண்ணில் நீரை வரவழைத்தது. ஊருக்கே சோறு கொடுத்த நாங்கள், டெல்லியில் சீக்கியர்களின் குருத்வாரில் பிச்சை எடுத்துத்தான் சோறு தின்கிறோம். சில நாட்கள் டெல்லி வாழ் தமிழர்கள் உணவு வழங்குகிறார்கள் என்று கூறினார். சாப்பாடு கிடைப்பதால்தான் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர் என சில இதயமற்றவர்கள் முகநூலில் குறிப்பிட்டுள்ளதை சுட்டி நிருபர் இக்கேள்வியை எழுப்பினார்.
மேலும், என்னிடம் 20 ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. ஆனால் 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆடி கார் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்துகிறார்களே என்று சொன்னபோது அய்யாக்கண்ணு அழுதுவிட்டார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தான், அய்யாக்கண்னுவை இப்படியெல்லாம் கூறி இழிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.