மரணித்த உயிர்கள்... ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் தேசம் எதிர்கொண்ட துயரங்கள்!
ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பு தேசத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சரமாரியாக பாதிப்படைய வைத்தது.
Recommended Video
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் துயரை எதிர்கொண்டனார். ஆனால் அரசோ சாதகமான அம்சங்களும் நடந்திருக்கிறது என்கிறது.
கடந்த ஆண்டு ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ந் தேதி இரவு அறிவித்தார். அந்த இரவை இந்த தேசம் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வங்கி ஏடிஎம்களில் பசியுடன் பல மணிநேரம் காத்திருந்தவர்கள் சுருண்டு விழுந்து மாண்டு போன பேரவலம் நிகழ்ந்தது. மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க முடியாத நிலையில் உயிரிழப்புகள் நடந்தேறின.
பொருளாதார தேக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தி சரிந்தது. பணமதிப்பிழப்புக்கு முன்னர் 7.4% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தி நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பிழப்புக்கு பின்னர் 6.1% ஆக சரிந்து நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதியவர்கள் துயரம்
நாட்டின் தொலைதூர மலைகிராமங்களுக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட செய்தியே 2 மாதங்கள் கழித்துதான் சென்றடைந்திருக்கிறது. சேமித்து வைத்திருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் முதியவர்கள் பட்ட துயரம் சொல்லி மாளாதது.
வேலைவாய்ப்பு பறிப்பு
சிறுவர்த்தகர்கள் சேர்த்து வைத்த லட்சக்கணக்கான ரூபாயை வங்கிகளில் மாற்ற முடியாமல் கமிஷன்வாலாக்களிடம் சிக்கி பெரும்தொகையை பறிகொடுத்த துயரம் நடந்துள்ளது. பலரும் தங்களது சிறுதொழில்களை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்த கொடுமையும் நடந்தது.
ஏடிஎம்களில் பணம் இல்லாத இந்லை
வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. பல மணிநேரம் கால்கடுக்க ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் நின்று வெறும் கையோடு திரும்பிய சோகத்தை அனைவரும் அனுபவித்திருக்கின்றனர்.
பணமதிப்பிழப்பால் சாதகம்
அதேநேரத்தில் அரசு தரப்பு சாதகமான அம்சங்களாக சிலவற்றை பட்டியலிடுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பணபரிவர்த்தனை டிஜிட்டல் மயமானது. சலூன்கள், வாடகை கார் ஓட்டுநர்களும் கூட டிஜிட்டல் மயத்துக்கு மாறினர்.
கருப்பு பணம் வந்துவிட்டது
அரசாங்க புள்ளி விவரப்படி பணமதிப்பிழப்புக்குப் பின்னர் ஓராண்டில் 1,25,000 பேர் புதியதாக வருமான வரி செலுத்தியுள்ளனர். சுமார் 2 லட்சம் நிறுவனங்கள் பதுக்கிய கருப்பு பணம் வெளியே வந்துவிட்டது என்கிறது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசின் எந்த ஒரு சமாதானமும் மக்களை அந்த துயரத்தில் இருந்து மீட்டுவிடாது என்பதுதான் யதார்த்தம்.
தீவிரவாதிகளுக்கு பண விநியோகம் என்பது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீதான கல்லெறி சம்பவங்கள் குறைந்துள்ளன என்கிறது மத்திய அரசு.