கால் டாக்ஸியின் இளம் பெண் பலாத்காரம்: டெல்லி நகர வீதிகளில் உலா வரும் ஆளில்லா விமானங்கள்
டெல்லி: கால் டாக்ஸியில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி டெல்லி நகர வீதிகளில் இரவு நேரங்களில் கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் உபேர் நிறுவனத்தின் கால் டாக்ஸியில் சென்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் டாக்ஸி டிரைவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த டாக்சி டிரைவர் ஷிவ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மேலும் பல பெண்கள் தற்போது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உபேர் டாக்ஸி நிறுவனத்திற்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க டெல்லி போலீசார் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த பறக்கும் கேமராக்கள் அடுத்த மாதம் முதல் டெல்லியின் வடக்கு பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களையும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உடையவை இதன் மூலம் 360 டிகிரியில் சுமார் 4 கிமீ வரை கண்காணிக்க முடியும்.
இவை படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு டெல்லியின் அனைத்து தெருக்களையும் கண்காணிக்க பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இதற்காக டெல்லி நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் வாடகையில் இது போன்ற சிறிய ஆள் இல்லா விமானங்களை வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் மறைமுக கேமராக்களைப் பொருத்தி இதுபோன்ற கண்காணிப்பு பணிகளை டெல்லி காவல்துறை செய்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications