பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசு முறை பயணமாக சீனா பயணம்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா செல்கிறார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு, சீனாவுக்கு பிரணாப் சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். அவருடன் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மற்றும் 4 எம்.பிக்கள் கொண்ட குழுவும் சீனா செல்கிறது.

சீனப் பயணத்தின் முதல்கட்டமாக குவாங்சூ நகருக்கு பிரணாப் இன்று செல்கிறார். இதன்மூலம், அந்நகருக்கு செல்லும் முதல் இந்தியத் தலைவர் என்னும் பெருமையை அவர் பெறுகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார். அதையடுத்து, சீன-இந்தியத் தொழிலதிபர்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.
பிறகு, அந்த மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதையடுத்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு பிரணாப் செல்கிறார். அங்கு அவர், சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
அப்போது, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டவை குறித்து சீனத் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தியா-சீனா இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications