மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து- அவசர சட்டத்தில் கையெழுத்திட பிரணாப் மறுப்பு
டெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தில் கையெழுத்திட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்து சட்ட நிபுணர்களிடம் அறிவுரை கேட்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல்கட்ட நுழைவுத் தேர்வு நடந்தது. சுமார் 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 24ம் தேதி அடுத்தக்கட்ட நுழைவுத் தேர்வு நடக்க இருந்தது.

இந்நிலையில் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஓராண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. ஆனால் அந்த அவசர சட்ட கோப்பில் கையெழுத்திட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.
அவசர சட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் சட்ட நிபுணர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவசர சட்ட கோப்பில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுவிட்டால் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவியர் வரும் ஜூலை மாதம் 24ம் தேதி நடக்கும் பொது நுழைவுத் தேர்வை எழுதத் தேவை இல்லை.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவசர சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications