வேற்றுமைகளைக் கொண்டாடும் சகிப்புத் தன்மை தேவை: ஜனாதிபதி பிரணாப் மீண்டும் வலியுறுத்தல்
கொல்கத்தா: நாட்டு மக்கள் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதுடன், மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும், வேற்றுமைகளைக் கொண்டாடுகிற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாட்டிறைச்சியை மையமாக வைத்து நாடெங்கிலும் நடைபெறும் மோதல்கள், பாகிஸ்தானை எதிர்ப்பதாகக் கூறி மும்பையில் சிவசேனைக் கட்சியினர் நடத்தும் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களால் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பரவலான கருத்து எழுந்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கிர்நகரில் உள்ள இல்லத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டி:
பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு கடந்த வாரம் நான் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அப்போது, ஏராளமான மொழிகள், பல வகையான மதங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உள்ள இந்தியாவில் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படி வெற்றிகரமாகச் செயல்படுகிறது? என்ற கேள்வியை என்னிடம் முன்வைத்தனர்.
அப்போது, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்திய நாகரிகம் எங்களுக்கு உணர்த்தி வருகிறது. எனவேதான், வேறுபாடுகளை நாங்கள் கொண்டாட முடிகிறது.
சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும், மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதைத்தான் இந்திய நாகரிகம் கற்பித்திருக்கிறது. நம்மை ஒற்றுமையுடன் இயங்கச் செய்ய அதுவே முக்கியமானதாகும்.
சகிப்புத்தன்மை என்பதை மனதளவில் உணர்வது அவசியம். நமது நடவடிக்கைகளில், அன்றாட பழக்க வழங்கங்களிலும் சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.