பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்வு!
டெல்லி: மானியம் பெறாத காஸ் சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.16.50 உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.69, டீசல் விலை லிட்டருக்கு ஐம்பது பைசா உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் நேற்றுதான் அறிவிப்பு வெளியிட்டன. இந்த நிலையில் மானியம் பெறாத சமையல் காஸ் சிலிண்டர் விலையை, ரூ.16.50 உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மேலும், விமான எரிபொருள் விலையும் 0.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு பிரச்சினைகளால் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதாகவும், அதனால் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்த கோட்டாவை தாண்டி வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது. 14.2 கிலோ எடை கொண்ட மானியம் பெறாத, காஸ் சிலிண்டர் விலை இதுவரை 906 ஆக இருந்துவந்தது. இன்றைய விலையேற்றத்திற்கு பிறகு அது ரூ.922.50-ஆக உயர்ந்துள்ளது.
மானியம் பெறாத சிலிண்டர் விலை உயர்வால், மாதம் ஒரு சிலிண்டர் மட்டும் பயன்படுத்தும், இல்லத்தரசிகளின் பட்ஜெட்டுக்கு பாதிப்பும் ஏற்படாது. அதைவிட கூடுதலாக பயன்படுத்தினால் விலையேற்ற பாதிப்பு தெரியும். அதேபோல, ஹோட்டல்களில் மானியமில்லாத சிலிண்டர்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதால், இதன் விலையேற்றம், உணவு பண்டங்கள் விலையை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
கடந்த மாதம்தான் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.23.50 குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.