பிரதமர் மோடியின் மனைவிக்கு 24 மணி நேர பாதுகாப்பு
டெல்லி: பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னிற்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அவர் வசித்து வரும் வீட்டை சுற்றிலும் வாகனம் மூலம் கண்காணிக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரிவேதி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா தனது மூத்த சகோதரரான அசோக் மோடியுடன் உஞ்ஜாவில் சேர்ந்த ராம்ஜி மந்திருக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார். அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.