காசு... பணம்... துட்டு... மணி... மணி... இருந்தால் சிறையில் கஞ்சாவும் கிடைக்குமாமே!
பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு காசு கொடுத்தால் கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர்: பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் போதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் கிடைப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணம் இருந்தால் பிணமும் வாய் பிளக்கும் என்ற பழமொழி தற்போது உண்மையாகி வருகிறது. அதுவும் வெளியே சகல வசதிகளுடன் வாழ்ந்த சிறை கைதிகளும் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் போதும் சகல சௌபாக்கியங்களுடன் சிறையில் தங்கள் தண்டனை காலத்தை கழிக்கலாம்.
ஆம். சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் போதை வஸ்துகளும் கிடைக்கும் என்ற அதிர்ச்சி கலந்த தகவலை கர்நாடகா மாநில டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
உயரதிகாரிக்கு புகார்
சிறைத் துறையில் நடைபெறும் சட்டவிதி மீறல் குறித்து டிஜிபி தத்தாவுக்கு டிஐஜி ரூபா அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு கிடைக்க சிறைத் துறை அதிகாரிகள், சிறை துறை டிஜிபி ராவ் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
கஞ்சா விநியோகம்
போதை பொருள்கள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 25 கைதிகளிடம் சோதனை செய்ததில் அவர்களில் 18 பேர் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதுதவிர மற்ற போதை வஸ்துகளும் பயன்படுத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டத்தை தங்கள் சௌகரியத்துக்கு வளைத்து வருகின்றனர்.
காசு கொடுத்தால்...
சிறையில் காசு கொடுத்தால் கைதியும் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் சிறையில் பாலியல் துன்புறுத்தல்களும் நடைபெறுகின்றன.
சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்கிருந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவரிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவ குழுவினரை சிறை கைதிகள் அவ்வப்போது தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் ரூபா.