காஷ்மீருக்கு திடீர் பயணம் செய்த பிரியங்கா.. கோவிலில் சாமி கும்பிட்டார்!
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு திடீர் பயணமாக போன காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு அதே வேகத்தில் டெல்லி திரும்பினார்.
நேற்று வடக்கு காஷ்மீரின், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மாதா கீர்பவானி கோவிலுக்கு பிரியங்கா திடீர் விசிட் அடித்தார். அங்கு மனமுருக சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலிலிருந்து புறப்பட்டு டெல்லி திரும்பினார்.
ஸ்ரீநகரிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலாகும் இது.
பிரியங்கா வருகை குறித்து கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அவர் வந்ததும், கோவில் அமைந்துள்ள துல்லமுல்லா நகரில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி வாகனங்கள் அங்கிருந்து வெளியேறவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்காவின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருநத்தாக கூறப்படுகிறது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்குக் கூட பிரியங்காவின் வருகை குறித்து தெரிவிக்கப்படவில்லையாம்.
கோவிலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தார் பிரியங்கா. பின்னர் ஸ்ரீநகர் திரும்பி அங்கிருந்து தனிப்பட்ட விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினரின் முக்கியக் கோவில்தான் இந்த கீர் பவானி கோவிலாகும். பிரியங்காவின் கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் பண்டிட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர் பவானி கோவிலுக்கு வந்த பிரியங்கா, ஸ்ரீநகர், நிஷாத் பகுதியில் உள்ள சுவாமி லக்ஸ்மஞ்சு ஆசிரமத்திற்கும் சென்றார்.
மறைந்த சுவாமி லக்ஸ்மஞ்சுவின் தீவிர பக்தையாக இருந்தவர் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.