"வியாபம்" ஊழல் விவகாரத்தில் 44 பேர் மர்ம சாவு: ம.பி. பா.ஜ.க. முதல்வர் சவுகானுக்கு கடும் நெருக்கடி!!
போபால்: பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசஅரசை உலுக்கும் வியாபம் ஊழல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட 44 பேர் மர்மமான முறையில் இறந்திருப்பது பெரும் பிரளயத்தை கிளப்பியுள்ளது. இதில் ஆளுநர் மகனும் இறந்துள்ள நிலையில் இவை அனைத்துமே இயற்கையானவை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் 'வியாபம்' ஊழல் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் என செல்வாக்கு மிக்க ஒரு பெரும் கும்பலுக்கு இதில் தொடர்புள்ளது தெரியவந்தது.
அம் மாநிலத்தின் முன்னாள் கல்வித் துறை அமைச்சர் லட்சுமி காந்த் சர்மா உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சுரேஷ் சோனி, கே.எஸ்.சுதர்சன் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். ஆளுநரின் மகன் சைலேஷ் யாதவ் லக்னோவில் கடந்த மார்ச் 25-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன் பிறகு, இவ்வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட 44 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
டாக்டர் ராஜேந்திர ஆர்யா என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நரேந்திர தோமர் என்பவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் ராஜேந்திர ஆர்யா, மாரடைப்பால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்ததாக் கூறப்படுகிறது. ஆனால், இறந்தபிறகே ஆர்யாவின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவி கால்நடை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள தோமர் இந்தூர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஆனால் இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையானவை என உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்துள்ளார். இதனிடையே இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.