பேரா. கல்பர்கி படுகொலை- ஸ்ரீராம் சேனா நிர்வாகியிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை!
பெங்களூர்: வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளால் பேராசிரியர் கல்பர்கி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது ஸ்ரீராம் சேனாவின் முக்கிய நிர்வாகி பிரசாத் அட்டவாரிடம் போலீஸ் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் மூத்த சிந்தனையாளரான பகுத்தறிவாளர் பேராசிரியர் கல்பக்ரியை வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். கர்நாடகாவை மட்டுமல்ல இந்தியாவையே இந்த படுகொலை உலுக்கியுள்ளது. இந்த படுகொலை தொடர்பாக தார்வாட் போலீசார் ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி பிரசாத் அட்டவாரை வளைத்துப் பிடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்பர்கி படுகொலை நியாயப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட மங்களூரைச் சேர்ந்த இந்துத்துவா தீவிரவாதி புவித் ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். தமது ட்விட்டர் பக்கத்தில், பேராசிரியர் பகவானுக்கு அடுத்த குறி என்றும் கொலை மிரட்டல் விடுத்திருந்ததால் கைது செய்யப்பட்ட ஷெட்டிக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
அத்துடன் கல்பர்கி படுகொலையில் ஷெட்டிக்கு தொடர்பும் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில்தான் சிக்கியிருக்கும் ஸ்ரீராம் சேனாவின் பிரசாத்திடம் கல்பர்கி படுகொலையை நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தது ஏன்? கொலையில் நேரடி தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications