Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு... மயிலாடுதுறையில் போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டினப் பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்க திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்று கூறி இன்று மாலை கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அரசியல் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக மயிலாடுதுறையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

11ஆம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று நான்கு மாட வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.

Protest against Dharmapuram Aadheenam Pattina Pravesam program Police gathering in Mayiladuthurai

மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் இந்து அமைப்பினரும் பக்தர்களும் பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு சுமப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பாஜக தலைவர் அண்ணாமலை. பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார்.

உலகளவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தடைகளை கடந்து பட்டினப் பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.
இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், தம்பிரான் சுவாமிகள் படைசூழ ஆதீனத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களில் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து வனதுர்க்கை கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் முன்னிலையில் மகாதீபாராதனை நடந்தது.

இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டினப் பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத்சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமானோர் தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்துள்ளனர்.

பட்டினப் பிரவேசம் நிகழ்வில் மனிதனை மனிதன் சுமப்பதற்கு திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இன்று நடைபெற உள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாரிடம் நேற்று மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசியல் கட்சியினர் கூறியுள்ளதால் மயிலாடுதுறையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+