இந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம்
கொல்கத்தா: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டை போல இதர மாநிலங்களும் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டின் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டை போராட்டக்காரர்கள் முன்மாதிரியாக கொண்டுள்ளனர்.
களத்தில் இறங்கும் உதயநிதி.. 'இந்தி திணிப்பு எதிர்ப்பு’.. 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
குற்றச்சாட்டு
இந்தியாவை ஒரு நாடு என கூறுவதை காட்டிலும் ஒரு துணை கண்டம் என்று கூறுவதுதான் மிகவும் பொருத்தமானது என பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். அந்த அளவுக்கு இந்தியாவில் கலாச்சார வேறுபாடுகள், மொழி, இனம் என பலவற்றிலும் வேறுபாட்டை இந்தியா கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் இதனை அழித்து ஒரே மொழி ஒரே நாடு எனும் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த தொடர்ந்து முயற்சிப்பதாக திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்தி திணிப்பு
இந்த முயற்சியின் ஒரு அங்கம்தான் இந்தி மொழி திணிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா என தென் மாநிலங்கள் இந்தி மொழி திணிப்புக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது இந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது. பெங்கால் போக்கோ (Bangla pokkho) எனும் அமைப்பு இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நேற்றிரவு பேரணியை நடத்தியது.
பேரணி
இந்த பேரணியில் தமிழ்நாட்டின் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அம்மாநிலத்தின் மிக முக்கிய இலக்கியவாதிகளான சிஷேந்து முகோபாத்யாய், கவிஞர் ஜெய் கோஸ்வாமி, கல்வியாளர் பவித்ரா சர்க்கார் போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பணிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை திணித்து இந்தி தெரியாத மாநிலங்களை மத்திய அரசு தண்டிப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணாதுரை
இந்த பேரணியில், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் படங்கள் மட்டுமல்லாது, வங்க தேசத்தின் காவலர் என்று அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ், கன்னட தேசியக் கவிஞர் குவேம்பூர் ஆகியோரின் படங்களையும் போராட்டக்காரர்கள் தாங்கி பிடித்திருந்தனர். பேரணி குறித்து பங்களா பக்ஷாவின் பொதுச் செயலாளர் கர்க் சட்டோபாத்யாய் கூறுகையில், "விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள், தங்களின் அடுத்த தலைமுறையினர் இந்திக்கு அடிமையாகிவிடுவார்கள் என்று நினைத்து உயிர்த்தியாகம் செய்யவில்லை. இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் வரும் 16ம் தேதி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.