பஞ்சாப்: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஏப். 30 வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிரடி தடை!
அமிர்தசரஸ்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் மீண்டும் கிடுகிடு வேகத்தில் உயர்ந்துள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகம் என்கிற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இது ஏற்கனவே 12 மாநிலங்களில் அமலில் இருந்தது. தற்போது ஒட்டுமொத்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படுகிறது.
மேலும் அரசியல் நிகழ்ச்சிகள் உட்பட பொதுநிகழ்ச்சிகள் அனைத்துக்கும் ஏப்ரல் 30-ந் தேதி வரை பஞ்சாப் மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட யார் மீறினாலும் வழக்குகள் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.