11,400 கோடி மோசடி எதிரொலி: 72 மணிநேரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18000 ஊழியர்கள் அதிரடி மாற்றம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18000 ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18000 ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து, வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நீரவ் மோடியின் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
இந்நிலையில் நீரவ் மோடியின் நிறுவனத்தில் நிதிநிலவரங்களைக் கையாண்டு வந்த விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை கைது செய்த சிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.
18000 ஊழியர்கள் இடமாற்றம்
இந்த 11,400 கோடி ரூபாய் மோசடியில் பஞ்சாப் நோஷனல் வங்கியின் பொது மேலாளர் பொறுப்புக்கு இணையான அதிகாரி ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியர்கள் அதிடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
72 மணி நேரத்தில் இடமாற்றம்
கடந்த 72 மணி நேரத்தில் 18000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீரவ் மோடியின் 11,400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
18 அதிகாரிகள் சஸ்பென்ட்
திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் என்ன செய்வது என தெரியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளதாக பொது மேலாளர் பதவிக்கு இணையான 18 அதிகாரிகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அண்மையில் சஸ்பென்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.