துபாய் வேலை- ஓமனில் பாலியல் அடிமையாக விற்பனை-நிர்வாண வீடியோ - மீட்கப்பட்ட பஞ்சாப் பெண் பகீர் தகவல்
ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
Recommended Video

அமிர்தசரஸ்: ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 30 பஞ்சாப் பெண்கள் பாலியல் அடிமையாக ஓமனில் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த 39 வயது பெண் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த நிலையில் அப்பெண் மீட்கப்பட்டார்.

நாடு திரும்பியுள்ள பெண் அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜித்சிங் அஜூலாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அப்பெண் கூறியதாவது:
அமிர்தசரஸில் கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் என்கிற டிராவல் ஏஜெண்ட்டை சந்தித்தேன். துபாயில் மாதம் ரூ30,000 சம்பளத்துடன் வீட்டு வேலை இருப்பதாக உறுதி அளித்தார்.
இதற்காக அவருக்கு ரூ55,000 பணம் கொடுத்தேன். ஏப்ரல் மாதம் 9-ந் தேதியன்று நான் துபாய் சென்றேன். ஆனால் அங்கு ஓமனைச் சேர்ந்த சேக் ஒருவருக்கு பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்டேன்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வீட்டு வேலைக்கு சென்ற பெண்கள் பலரும் ஓமனில் பாலியல் அடிமைகளாக இருந்து வருகின்றனர். கடந்த மே 5-ந் தேதி ஓமன் சேக்கிடம் இருந்து தப்பி துபாய் இந்திய தூதரகத்திடம் தஞ்சம் அடைந்தேன்.
அங்கிருந்து என் கணவரை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்தேன். பின்னர் எம்பி குர்ஜித் சிங் அஜூலா மூலமாக நான் மீட்கப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தேன்.
என்னுடைய பாஸ்போர்ட்டை ஓமன்சேக் பறித்துக் கொண்டு என்னை விபசாரத்தில் தள்ளினார். என்னைப் போல பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தால் கொடூர சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும்.
பெண்களை நிர்வாண வீடியோக்களும் எடுத்து வைக்கின்றனர். என்னுடன் அமிர்தசரஸை சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் நிர்வாண வீடியோ ஓமன் சேக்குகளிடம் இருப்பதால் அப்பெண் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் கூறினார்.












Click it and Unblock the Notifications