தனியார் சேனல்களுக்கு தடை?- புதிய சேனல் தொடங்க கர்நாடகா அரசு திட்டம்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவை நிகழ்வுகளை படம் பிடிக்க தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை நிகழ்வுகளை படம்பிடித்து ஒளிபரப்ப அரசு புதிய சேனல் தொடங்க இருப்பதாக அம்மாநில சட்டப்பேரவை தலைவர் காகோடு திம்மப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்களது செல்போனில் ஆபாச படம் பார்த்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் சேனல்கள் இதை அடிக்கடி ஒளிபரப்பியதால் பாஜக உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே கர்நாடக சட்டப்பேரவையில் படம் பிடிக்க சேனல்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.
அதே போல கர்நாடக முதல்வர் சித்தராமையா விவாத நேரத்தில் தூங்குவது, மற்ற அமைச்சர்கள் அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் இருப்பது, அருகில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற செயல்களையும் தனியார் சேனல்கள் வெளிச்சம் போட்டு காண்பித்தன. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தனியார் சேனல்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
தடைவிதிக்க கோரிக்கை
எனவே அனைத்து கட்சியினரும் கர்நாடக சட்டப் பேரவை மற்றும் மேலவை நிகழ்வுகளை படம்பிடிக்க தனியார் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
மாண்பு பறிபோகிறது
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசும் போது, ‘‘அவைநடவடிக்கையின் போது தனியார் தொலைக்காட்சிகளை சேர்ந்த ஊழியர்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இதனால் சட்டப்பேரவையின் மாண்பு பறிபோகும் அபாயம் இருக்கிறது. தனியார் சேனல்களுக்கு தடைவிதிப்பது குறித்து அனைத்து கட்சியினரும் ஒரே முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.
அரசு சேனல்
இது தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காகோடு திம்மப்பா பேசும்போது, ‘‘நாடாளுமன்ற நிகழ்வுகளை படம் பிடிக்க தனியார் சேனல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு சேனல் மட்டுமே அந்த நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது. எனவே, கர்நாடகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சேனல்
எனவே சட்டப்பேரவை, மேலவை நிகழ்வுகளை படம் பிடித்து மக்களுக்கு ஒளிபரப்ப கர்நாடக அரசு புதிய சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளது. அரசு சேனல் தொடங்க அனுமதிகோரி மத்திய செய்தித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அரசின் புதிய சேனல் தொடங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.