தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றுவோம் என்கிறது பாஜக!
டெல்லி: தலித்துகள் பெற்று வரும் இடஒதுக்கீடு முறையில் வருமான உச்சவரம்பு கொண்டு வந்து மாற்றி அமைப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஞ்சய் பாஸ்வான் கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் கடந்த 60 ஆண்டுகாலம் தலித் மக்கள் பெற்றது என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். இதன் மூலம் எப்படியெல்லாம் சில குடும்பங்கள் மட்டும் பயனடைந்து மற்றவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் பாஜக ஏற்கிறது. இடஒதுக்கீடு மூலம் பணி பெற்று ரூ1 லட்சம் மாத வருமானம் பெறும் தலித் குடும்பங்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது அவசியமானதாகும்.
குறிப்பாக முதல் நிலை, இரண்டாம் நிலையில் பணியாற்றும் தலித் அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நான் தொழில்முறையில் என்ஜினியர், ஒரு எம்.பி. பிறகு எதற்கு என் மகன்களுக்கு இடஒதுக்கீடு அவசியமாகிறது?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு மூலம் பாரதிய ஜனதா ஆட்சியில் அமைந்தால் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை மாற்றி அமைப்பது தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications