இந்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி 5.5 சதவீதமாகவே இருக்கும்; ஆனாலும் கவலை வேண்டாம்- ரகுராம் ராஜன்

ஒரு இணையத்தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதியால் நமக்குக் கிடைக்கும் வருமானத்துக்கும், இறக்குமதிக்கு நாம் செலவிடும் பணத்துக்கும் உள்ள வித்தியாசம்) மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பற்றாக்குறை ஆகியவை சில சிறிய அளவிலான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமே சரி செய்யக் கூடியவை தான்.
ஆனால், ஒரே நாள் இரவில் நாம் உலகின் மாபெரும் உற்பத்தி கேந்திரமாக மாறி நமது ஏற்றுமதிகளை அதிகரித்து, பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது.
மேலும் இந்தப் பிரச்சனைகளுக்கு நாம் 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தான் காரணம் என்று கூறுவதும் தவறு. நமது அடிப்படை பலமாகவே உள்ளது. இப்போதைய தேவை சிறிய அளவிலான சீர்திருத்தங்கள் தான்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 முதல் 5.5 சதவீதத்குக்குள் தான் இருக்கும். இது தான் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும். ஆனால், இப்போதைய உலக சூழலில் இந்த அளவு வளர்ச்சி என்பது சாதாரணமாதும் அல்ல.
கிரிக்கெட் மேட்ச்சில் நமது வீரர்கள் ஒரு சிக்ஸர் அடித்தவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆராவாரம் கிளம்புமே அது மாதிரி தான் இப்போது ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்தவுடன் பங்குச் சந்தைகளில் பெரும் உற்சாகம் புரண்டு ஓடுகிறது. ஆனால், இதை நான் என் தலைக்குள் கொண்டு போவதில்லை.
நமது இப்போதைய தேவை தொடர்ச்சியான, சிறிய- சிறிய சீர்திருத்த நடவடிக்கைகள் தான். இதை நாம் செய்தே ஆக வேண்டும்.
2008ம் ஆண்டு பொருளாதாரத் தேக்கத்தையடுத்து மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் தான் இப்போதைய சிக்கலுக்குக் காரணம். சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க சில நடவடிக்கைகள் அப்போது எடுக்கப்பட்டன. ஆனால், இதனால் பணவீக்கம் தான் உருவானது. இதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. இதனால் பணவீக்கம் குறைந்தாலும் மக்களின் செலவிடும் திறன் குறைந்தது. முதலீடுகள் குறைந்துவிட்டன என்று கூறியுள்ளார் ராஜன்.












Click it and Unblock the Notifications