இந்தியப் பொருளாதாரத்தை ஒன்றுமில்லாமல் செய்தவர் மோடி! - தாக்குதலை ஆரம்பித்த ராகுல்
அகமதாபாத்: இந்தியப் பொருளாதாரத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைப்பதற்காக 3 நாள் பயணமாக ராகுல் காந்தி நேற்று குஜராத் சென்றார். அங்கு பாட்டியா என்ற கிராமத்துக்குச் சென்றவர், வேனில் இருந்தபடி மக்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், "இந்திய இளைஞர்கள் உழைக்க விரும்புகிறார்கள். நாட்டை முன்னேற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பைத் தர பா.ஜ.க அரசு தவறி விட்டது.
பிரதமர் மோடி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விட்டார். அவர் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் சிறு வணிகர்கள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.வுக்கு மக்கள் மீது ஈவு இரக்கமே கிடையாது. ஏழைகள் மீது இம்மியளவும் அக்கறை இல்லை. பணக்காரர்களுக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வாதிகாரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது நாடு. அதற்கான அத்தனை வேலைகளையும் பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார்," என்றார்.
துவாரகாவில் சிறிது தூரம் மாட்டு வண்டியில் பயணித்த ராகுல், விவசாயிகளை சந்தித்தார்.
குஜராத்தில் பாஜகவை வீழ்த்துவதில் மிகத் தீவிரமாக உள்ள ராகுல், தனது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications