கால் ரொம்ப வலிக்குது.. ஹெல்மெட் மாட்டி புல்லட் ஓட்டிய ராகுல். .பாரத் ஜோடோ யாத்திரையில் ‛‛மாஸ்’’
இந்தூர்: கன்னியாகுமரியில் இருந்து துவங்கிய பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை கைவிட்டு ஹெல்மெட் அணிந்து புல்லட்டில் பயணித்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
2014 நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் 2024ல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கிளம்பிய கோஷம்? பாஜக வெளியிட்ட வீடியோ
குமரியில் துவங்கிய யாத்திரை
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறது. இந்திய ஒற்றுமை பயணம் என கூறப்படும் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் ராகுல்காந்தி செப்டம்பர் 7 ம் தேதி துவங்கினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடி கொடுத்து ராகுல் காந்தியின் யாத்திரையை துவக்கி வைத்தார்.
ராகுல் காந்திக்கு ஆதரவு
இந்த யாத்திரை மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ளது. 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணித்து காஷ்மீர் செல்ல உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் காலை 10:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் யாத்திரை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி உட்பட 119 பேர் 'பாரத் யாத்ரிகள்' தொடர்ந்து பயணிக்கும் வேளையில் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் யாத்திரை
தற்போது தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் என கருதப்படுகிறது. இதனால் மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடப்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் மத்திய பிரதேச யாத்திரையில் பிரியங்கா காந்தியும் ராகுலுடன் 2 நாள் நடந்து சென்றார்.
புல்லட் ஓட்டிய ராகுல்
இந்நிலையில் 4வது நாளாக இன்று மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை துவங்கினார். அவருடன் முன்னாள் முதல்வர்களான கமல்நாத், திக்விஜய் சிங் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நடைப்பயணம் செய்தனர். இன்று மாநிலத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள மியாவ் நகரில் யாத்திரை நடந்தது. இந்த வேளையில் திடீரென்று ராகுல் காந்தி புல்லட் ஓட்டினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரின் புல்லட்டை வாங்கிய ராகுல் காந்தி ஹெல்மெட் அணிந்து பந்தாவாக புல்லட் ஓட்டினார்.
வெளியான வீடியோ
ராகுல் காந்தி புல்லட் ஓட்டுவார் என சற்றும் எதிர்பாராத போலீசார் அவரது செயலால் உடனடியாக அந்த சாலையில் புல்லட் செல்ல வசதியாக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து சிறிது தூரம் புல்லட் ஓட்டிய ராகுல் காந்தி மீண்டும் நடக்க தொடங்கினார். இதற்கிடையே ராகுல் காந்தி புல்லட் ஓட்டிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. பொதுவாக தொண்டர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிளில் சிலர் பயணம் செய்யும்போது சில தலைவர்கள் ஹெல்மெட் அணியாமல் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் ராகுல் காந்தி முறைப்படி ஹெல்மெட் அணிந்து புல்லட் ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.