விவசாயிகளைப் பார்க்காமல் வெளிநாடு செல்லும் மோடி... 10க்கு 0 மார்க் போட்ட ராகுல்!
அமேதி: விவசாயிகளின் வீடுகளுக்கு செல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும் மோடி அரசுக்கு 10-க்கு பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுக்க முடியும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு 3 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். அந்த பயணத்தின் இடையே, பாரபங்கி மாவட்டம் ஜெகதீஷ்பூர் என்ற இடத்தில், பருவம் தவறிய மழையால் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி கூறியதாவது :-

கூடவே ஒரு கேமராமேன்...
பிரதமர் மோடி ஆட்சியில், ஏழை தொழிலாளர்களும், விவசாயிகளும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். மோடி, விவசாயிகளின் வீடுகளுக்கு செல்வது இல்லை. வெளிநாடுகளுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்லும்போதெல்லாம், ஒரு கேமராமேனையும் கூட்டிச் செல்கிறார்.

பழிவாங்கும் அரசியல்
பிரதமர், பழிவாங்கும் அரசியல் நடத்துகிறார். எனது தொகுதியில் மெகா உணவு பூங்கா திட்டத்தை ரத்து செய்து விட்டார். அந்த திட்டம், விவசாயிகளின் தலைவிதியையே மாற்றி இருக்கும். ஆனால், அது ரத்து செய்யப்பட்டதால், 10 அண்டை மாவட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெகா உணவு பூங்கா திட்டம்...
என்னை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளை பழிவாங்கி விட்டார். மெகா உணவு பூங்கா திட்டத்தை என்னிடம் இருந்து பறிக்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து பறித்து விட்டார். இருப்பினும், அத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்போம்' என்றார்.

10க்கு 0...
பின்னர், ‘மோடி அரசு ஓராண்டு நிறைவு செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை அணுகியதை பொறுத்தவரை, 10-க்கு 0 மதிப்பெண்தான் கொடுக்க முடியும். சில தொழில் அதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சினைகளை அணுகியதை கணக்கில் கொண்டால், 10-க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன்' என ராகுல் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications