இனி தாலியை அடகு வைக்க வேண்டாம்.. பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு! ராகுல் காந்தி உறுதி
காந்திநகர்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனையடுத்து மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன.

மே 7ம் தேதியன்று 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் குஜராத் முக்கியமான மாநிலமாகும். இங்குள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி,
"காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
பாதன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியாவில் வேலையின்மையும், பணவீக்கமும் உச்சத்தில் இருக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் மருத்துவ கட்டணங்களால் கடனில் மூழ்குகின்றனர். மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை, மருந்துகளின் அதீத விலை உயர்வு காரணமாக கடன், கடனுக்கான வட்டி என மீளவே முடியாத நீண்ட கால சுழலில் மக்கள் சிக்கி வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்குவதன் மூலம் இந்த மீளா துயரத்திலிருந்து மக்களை மீட்போம். எனவே இந்திய பெண்மணிகள் யாரும் மருத்துவ சிகிச்சைக்காக இனி தாலியை அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
தாலி குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகின்றன. இதனை பாஜகதான் உருவாக்கியது. அதாவது, சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
"காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார். இதனையடுத்து தாலி என்பது மிக முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications