போலி இந்துக்கள், இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம்- ராகுல் காந்தி
ஜெய்ப்பூர்: போலி இந்துக்கள் மற்றும் இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்த நாட்டில் இன்று என்ன யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது? இந்து, இந்துத்துவா என பேசப்பட்டு வருகிறது. இந்து என்பதும் இந்துத்துவா சித்தாந்தமும் ஒன்று அல்ல. இரண்டும் வெவ்வேறானவை.
நான் ஒரு இந்து. இங்கு கூடியுள்ளவர்கள் இந்துக்கள். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள். உண்மையை தேடுதல் என்பதற்கு பெயர் சத்தியாகிரகம். இதற்காக தங்களது உயிரையும் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள் இந்துக்கள். மகாத்மா காந்தி உண்மையைத் தேடினார். ஆனால் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ஏனெனில் நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவவாதி.
|
இந்து-இந்துத்துவா
இந்துக்கள் உண்மையை நேசிப்பவர்கள். ஆனால் இந்துத்துவவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் உண்மையை மறந்துவிடுவார்கள்.இந்த நாட்டின் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கவும் நேசிக்கவும் கூடியவர்தான் இந்துவாக இருக்க முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் போலி இந்துக்கள். இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தத்தின் ராஜ்ஜியம்தான் நடைபெறுகிறது. இங்கே இந்துக்களின் ராஜ்யம் இல்லை. ஆகையால் அதிகாரத்தில் இருந்து இந்துத்துவவாதிகளை நாம் தூக்கி எறிய வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்
2014-ம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இந்துத்துவவாதிகள் இருக்கின்றனர். போலி இந்துக்களான இந்துத்துவவாதிகளிடம் இருந்து அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் முதுகில் குத்தியவர் பிரதமர் மோடி. விவசாயிகளின் நெஞ்சில் குத்தாமல் முதுகில் குத்திய பிரதமர் மோடி ஒரு இந்துத்துவவாதி.

மக்களின் நிலை என்ன?
நாட்டின் மக்கள் தொகையில் 1% பேரிடமே தேசத்தின் 33% சொத்துகள் உள்ளன. 10% பேரிடம்தான் 65% பணம் கையில் இருக்கிறது. 50% ஏழை மக்களிடம் வெறும் 6% பணம்தான் இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி அவரது 3,4 தொழிலதிபர்களுக்காக நாட்டையே தாரைவார்த்துவிட்டார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பிரியங்கா அட்டாக்
இக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, 70 ஆண்டுகளாக இந்த தேசத்தை காங்கிரஸ் கட்டி எழுப்பியது. ஆனால் 7 ஆண்டுகளில் அத்தனையையும் பிரதமர் மோடி விற்பனை செய்துவிட்டார். விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உற்ற தோழனாக இருக்க வேண்டிய மத்திய அரசும் பிரதமர் மோடியும் சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைத்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் வந்துவிட்டாலே சீனா பற்றி பேசுவார்கள், வகுப்புவாதம் பற்றி பேசுவார்கள், ஜாதியவாதத்தை முன்வைப்பார்கள்.. ஆனால் மக்கள் படும் துயரங்களை பற்றி மட்டும் பேசமாட்டார்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications