ராகுல் பாதயாத்திரை வர்றார்.. யாரும் ரோட்டோரமாக "பொங்கல்" வைத்து விடாதீங்கப்பா!
ஹவேரி, கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராம மக்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இது அக்கிராம மக்களை சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. "அடி மடி"யில் இப்படிக் கை வச்சா எப்படிப்பா என்று கிராமத்து மக்கள் புலம்பிக் கொண்டுள்ளனர்.
மைதுரு மற்றும் குடகுரு ஆகிய கிராமங்கள்தான் அவை. அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள "கட்டளை" என்னவென்றால்... ராகுல் காந்தி பாதயாத்திரையாக வருகிறார். அவர் வரும் சமயத்தில் சாலையோரமாக உட்கார்ந்து காலைக் கடனைக் கழிக்காதீர்கள் என்பதுதான்.
சனிக்கிழமை மைதுரு மற்றும் குடகுரு ஆகிய இரு கிராமங்களிலும் கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை செல்லவுள்ளார் ராகுல் காந்தி. காலை ஒன்பதரை மணிக்கு தனது பாதயாத்திரையை அவர் தொடங்குகிறார்.
எல்லாமே வெளியில்தான்
இந்தக் கிராமத்து மக்களில் முக்கால்வாசிப் பேர் சாலையோரமாக, வயல் வெளிகளில்தான் காலைக் கடனைக் கழிப்பது வழக்கம். எனவேதான் ராகுல் காந்தி வருகிற நேரம் பார்த்து யாரும் ரோட்டோரம் "பொங்கல்" வைத்து விடப் போகிறார்களே என்று முன்னெச்சரிக்கையாக "போய்ராதீங்க" என்று கட்டளை பிறப்பித்துள்ளனராம்.
ரைட்டு விடு
இந்தக் கட்டளையை ஏற்று இப்போதே மக்கள் தங்களது உட்காரும் லொக்கேஷனை மாற்ற ஆரம்பித்து விட்டனராம். 3 முதல் 4 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் இதற்காக அவர்கள் மெனக்கெட்டு போய் காலைக் கடனை முடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனராம்.
பெண்களுக்குத்தான் சிரமம்
இதில் பெண்கள் நிலைதான் பெரும்பாடாக உள்ளதாம். ராகுல் காந்தி வரும் பாதை நெடுகிலும் "சுத்தபத்த"மாக இருக்க வேண்டும் என்று கிராமத்து காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களும் உத்தரவிட்டிருப்பதால் நீண்ட தூரம் காலைக் கடனுக்காக போக வேண்டியுள்ளதே என்று அவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதாம்.
மீறி உட்கார்ந்தா ஃபைன்
இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்கு கிராமப் பஞ்சாயத்துக்கள் உத்தரவிட்டுள்ளதாம். மீறி யாராவது ரோட்டோரமாக உட்கார்ந்து போய் விட்டால் அபராதம் தீட்டி விடுகிறார்களாம்.
1125 பேர்
மைதுரு கிராமத்தில் 1125 பேர் வசிக்கின்றனர். 248 வீடுகள் உள்ளன. இதில் 97 வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. குடகுரு கிராமத்தில் 434 வீடுகள் உள்ளன. அதில் 110 வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளதாம்.
எங்க பார்த்தாலும் கருமமாக்கினா எப்பூடி
இதுகுறித்து கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், எங்கள் மக்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மல ஜலம் கழிக்கிறார்கள். இதனால் சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. ராகுல் காந்தி வருகிற நேரமும் அது போல இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் உத்தரவு போட்டுள்ளோம்.
அவர் போகட்டும்.. எப்படியும் போய்க்கோங்க
ராகுல் காந்தி பயணம் முடிந்ததும் இந்தத் தடையை நீக்கி விடுவோம். அதன் பிறகு சுதந்திரமாக வழக்கம்போல அவர்கள் காலைக் கடனைக் கழித்துக் கொள்ளட்டும்.
நாறிடக் கூடாதுல்ல
ராகுல் காந்தியுடன் பாதுகாப்புப் படையினர், பல தலைவர்களும் வருவார்கள். அவர்கள் வருகிற நேரத்தில் சாலையோரம் நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா. எனவேதான் இந்த கட்டாய உத்தரவைப் பிறப்பித்துள்ளோம் என்றார்.
வயலெல்லாம் "காயுது" பாஸ்
இந்த தடை குறித்து மலத்தேஷ் துர்கான்னவர் என்ற கிராமவாசி கூறுகையில், சுற்றியுள்ள வயல் வெளிகளில்தான் நாங்கள் காலைக் கடனைக் கழிப்பது வழக்கம். பக்கத்து வீட்டு டாய்லெட்டுக்குப் போகலாம் என்றால் எங்கள் வீட்டுப் பெண்கள் சங்கடப்படுகிறார்கள். இதுக்காக அடுத்து வீட்டுக்குப் போக முடியுமா என்று சங்கோஜப்படுகிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் "கிராக்கி"
காலைக் கடனுக்கு பெரும் பங்கம் வந்திருப்பதால் டாய்லெட் வைத்துள்ள வீடுகளில் ஜனங்கள் அலை மோதுகிறார்களாம். ஆனால் டாய்லெட் வைத்திருப்போர் பலர் மற்றவர்களை வீட்டுக்குள் விட மறுக்கிறார்களாம். எங்க வீட்டு கக்கூஸ் நாறிப் போய்டுமே என்பது அவர்களது கவலையாம்.
3 கிலோமீட்டர் நடந்து போனா என்னாவது...!
சவித்ரவ்வா என்ற மூதாட்டி கூறுகையில், என்னைப் போய் அதிகாலையில் 3 கிலோமீட்டர் தூரம் போய் "இருக்க"ச் சொல்கிறார்கள். நான் எப்படி அவ்வளவு தூரம் நடந்து போக முடியும். அதுவும் அதிகாலையில். வயலில் இருக்கலாம் என்றால் கூடாது என்று தடை போட்டுள்ளனர் என்றார் கோபமாக.
சீக்கரமா வந்துட்டு போ சாமி
ஹாலம்மா என்ற பெண் கூறுகையில், சீக்கிரம் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை முடித்து விட்டுக் கிளம்பினால் புண்ணியமாகப் போகும். எங்களால் இந்தக் கஷ்டத்தை தாங்க முடியவில்லை என்றார் சலித்தபடி.
அப்டீன்னா.. கிராமத்து மக்களிடம் இயற்கையோடு இயற்கையாக ராகுல் காந்தி "உக்காந்து" பேச முடியாது போலயே!