ஊடகங்களில் ரயில்வே பட்ஜெட் 'லீக்' ஆனது துரதிருஷ்டவசமானது: ராஜ்யசபா தலைவர்
டெல்லி: ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பாக வெளியில் கசிந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு எதிரான உரிமை மீறல் பிரச்சினையை தள்ளுபடி செய்த ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி, இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை, ரயில்வே பட்ஜெட், அத்துறை அமைச்சர் சதானந்தகவுடாவால் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து ஏற்கனவே தகவல் வெளியே கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரயில்வே பட்ஜெட் அம்சங்கள், ஏற்கனவே வெளியாகிவிட்டதாக குற்றம்சாட்டி, புதன்கிழமை, ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களது கைகளில் பட்ஜெட்டுக்கு முந்தைய நாள், பட்ஜெட் அம்சங்கள் குறித்து வெளியான செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் துண்டு காகிதங்கள் இருந்தன.

மேலும், சதானந்தகவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவர அனுமதி கோரி ராஜ்யசபா தலைவரிடமும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இக்கோரிக்கை மீது பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதாக ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்திருந்தார்.
புகாரை ஆய்வு செய்த பிறகு, இன்று ராஜ்யசபாவில் ஹமீத் அன்சாரி இதுகுறித்து கூறுகையில், "பட்ஜெட் அம்சங்கள் வெளியே கசிந்தது துரதிருஷ்டவசமானது. அலுவல் ரகசியம் காக்கப்படவில்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதை அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
இதற்கு முந்தைய ஆட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது அமைச்சர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சதானந்தகவுடாவுக்கு எதிரான உரிமை மீறல் பிரச்சினையை தள்ளுபடி செய்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications