உ.பி. சட்டசபைத் தேர்தல்.. காங்கிரஸ் தலைவராக பாலிவுட் நடிகர் ராஜ் பப்பர் நியமனம்
டெல்லி: உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் பப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அம்மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் இன்று அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவும் அங்கு கால் ஊன்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியோ அதிரடியாக உத்தரப்பிரதேச மேலிடப் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத்தை களமிறக்கியுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியும் களம் இறக்கி விடப்பட்டுள்ளார். மாநில தேர்தல் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா கட்சியில் பல மாற்றங்கள் செய்து வருகிறார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலிவுட் நடிகர் ராஜ் பப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அம்மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் இன்று அறிவித்தார். இருப்பினும் இது அம்மாநில தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வாதேராவின் வியூகமாகக் கருதப்படுகிறது.
பாலிவுட் நடிகரான ராஜ் பப்பர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் முதன்முதலாக அரசியலில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் கடந்த 1989-ல் இணைந்தார். பிறகு, அமர்சிங் மூலமாக சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தார். மக்களவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தார்.
கடநத் 2006-ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ் பப்பர் பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 2009 மக்களவை தேர்தலில் உபி முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவை தோற்கடித்தார். கடந்த தேர்தலில் காஜியாபாத்தில் போட்டியிட்டு மத்திய இணை அமைச்சரான வி.கேசிங்கிடம் தோற்றவர் மீண்டும் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.












Click it and Unblock the Notifications