நவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்
ஜெய்ப்பூர்: வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். கை கொடுக்க யாருமில்லை உடன் பிறந்தவர்கள் கை விட்டு விட்டதால் அந்த முடிவை எடுத்தார் நல்ல தங்காள். இன்றைக்கும் அந்த கதை கிராமங்களில் சொல்வதை கண்ணீர் வழிய கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதே போல ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ஐந்து பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பார்கள். இப்போது படித்து வேலைக்கு போவதால் பெண்ணை பெற்றவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்க்கிறார்கள். ஆனால் அவர்களை வளர்க்கும் வரை கஷ்டம்தான்.
இந்த காலத்தில் வாழ வழியின்றி ஆறு பெண்களும் உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை.
ஐந்தும் பெண் தற்கொலை
ராஜஸ்தானில் வானு தேவி என்ற பெண் தனக்கு பிறந்த சந்தோஷி, மம்தா, நைனா, ஹம்சா, ஹேமலதா ஆகிய ஐந்து பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்.
பெண் குழந்தைகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள பாஞ்ச் பிப்லா கிராமத்தைச் சேர்ந்த கீதாபாலியா என்ற பெண் 5 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள கிணற்றில் குதித்தார். இதில் நான்கு குழந்தைகள் உயிரிழக்கவே, ஒரு குழந்தையும் கீதாபாலியாவும் உயிர் தப்பினர். அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
நல்ல தங்காள் யார்
நல்லதங்காள் என்று ஆரம்பித்திருக்கிறோமோ யார் என்று யோசிக்கிறீர்களா? தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரம் கிராமத்தில் பிறந்த சேதுபதி இந்திராணி தம்பதியரின் மகள்தான் நல்லதம்பி, நல்லதங்காள். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள்
நான்கு ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள் பெற்ற நல்ல தங்காளுக்கு பஞ்சம் பசி வாட்டி எடுத்தது. அண்ணன் கொடுத்த சீர் வரிசைகளை விற்று சாப்பிட்டாள். எதுவுமே இல்லாமல் போகவே அண்ணன் வீடான அர்ச்சுனாபுரம் கிராமத்திற்கு சென்றாள். அண்ணன் வேட்டைக்கு சென்று விடவே, அண்ணியோ கவனிக்காமல் விட்டு விட்டாள். பசியாள் வாடிய பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டாள். இதைக்கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி கோபப்பட்டு வந்து அண்ணியை வெட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் கட்டி வணங்கும் மக்கள்
சிவன் காட்சி கொடுத்து அனைவரையும் உயிர்பித்தனர். ஆனால் இருவரும் சிவன் பாதங்களை சரணடைந்தனர். இன்றைக்கும் நல்லதங்காள், நல்லதம்பிக்கு கோவில்கள் கட்டி வணங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் கோவில் கட்டி வணங்குகின்றனர். இன்றைக்கும் நவீன நல்லதங்காள்கள் பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.