ராஜஸ்தான்: தலையில் தானே மண் அள்ளி போட்ட பாஜக! அசோக் கெலாட்டை சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக பேச வைத்தது!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் எதிரும் புதிருமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்த முதல்வர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலை "சுமூகமாக" முடிவுக்கு கொண்டு வந்து தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுள்ளது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் 5 ஆண்டுகளாகவும் தீர்க்கப்படாமல் இருக்கிறது உட்கட்சி பிரச்சனை. முதல்வர் அசோக் கெலாட், மாஜி துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான இந்த பிரச்சனை சில நேரங்களில் பூதாகரமாகவும் வெடித்தது உண்டு. டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதும் உண்டு.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸில் நீடிக்கும் இந்த மோதலை பாஜக தொடர்ந்து ரசித்து வருகிறது. இந்த மோதல் போக்கே ராஜஸ்தானில் தங்களுடைய தேர்தல் வெற்றியை அறுவடை செய்து தந்துவிடும் என்பது பாஜகவின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனாலும் பாஜகவிலும் உட்கட்சி பூசல் தொடருவதால் டெல்லி மேலிடம் சற்று கவலையாகத்தான் இருந்தது.
தற்போது மணிப்பூர், மிசோரம் விவகாரங்களில் பாஜக மேலிடத் தலைவர்கள் முன்வைத்து விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக ராஜஸ்தான் அரசியல் களத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. ஆம் இப்போது முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு பாஜக மீது பாய்ந்து கொண்டிருக்கிறார்.
மணிப்பூர் விவகாரத்தில் மிசோரம் மீது 1996-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்திய விமானப் படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது என்பது பாஜக தலைவர்களின் விமர்சனம். அத்துடன், பாஜக சோசியல் மீடியா பொறுபாளர் அமித் மாள்வியா இன்னொரு ட்வீட் பதிவையும் போட்டார். 1966-ல் மிசோரம் தலைநகர் ஐய்ஸ்வால் மீது ராஜேஷ் பைலட், சுரேஷ் கல்மாடி ஆகியோர்தான் விமானப் படை விமானத்தில் இருந்து குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த இருவருமே காங்கிரஸில் இணைந்து அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர் என குற்றம்சாட்டி இருந்தார் அமித் மாள்வியா.
இந்தக் குற்றச்சாட்டை ராஜேஷ் பைலட் மகன் சச்சின் பைலட் திட்டவட்டமாக மறுத்திருந்தார். பாஜகவின் அமித் மாள்வியா, தவறான ஆண்டுகளையும் தவறான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்; ராஜேஷ் பைலட் 1966 மார் 5-ந் தேதி மிசோரமின் ஐஸ்வால் மீது விமானப் படை விமானம் மூலம் குண்டு வீசியதாக கூறியுள்ளார். 1966-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதிதான் இந்திய விமானப் படையில் ராஜேஷ் பைலட் இணைந்தார் என குறிப்பிட்டு அந்த சான்றிதழையும் ட்விட்டரில் பகிரங்கப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோதாவில் குதித்துள்ளார். சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட், தீரமிக்க இந்திய விமானப் படை வீரர். அவரையும் இந்திய விமானப் படையையும் பாஜக அவமதிக்கிறது என வரிந்து கட்டி வெளுத்தெடுத்திருக்கிரார் அசோக் கெலாட்.
ராஜஸ்தானில் எலியும் பூனையுமாக முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் பாஜகவின் புண்ணியத்தால் "நண்பேன்டா, காங்கிரஸ்டா" என குரல் கொடுத்து வருகின்றனர். இது ராஜஸ்தான் சட்டசபை தேர்தலிலும் கடுமையாக எதிரொலித்தால் பாஜகவுக்குதான் பின்னடைவு என்கின்றனர் அக்கட்சியின் சில மூத்த தலைவர்கள்.












Click it and Unblock the Notifications