ராஜஸ்தான்: ஆளும் காங்கிரஸுக்கு எதிராக அதிருப்தி அலை- பாஜகவுக்கு அமோக வெற்றி 'கன்பார்ம்': ABP-CVoter
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக அமோக இடங்களைக் கைப்பற்றி சரித்திர வெற்றியைப் பெறும் என்றும் ABP-CVoter கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ABP-CVoter கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்புகளில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு, பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுக்கப் போகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் வாக்காளர்களிடம் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை இன்று ABP-CVoter வெளியிட்டுள்ளது. இக்கருத்து கணிப்பு முடிவுகள்:
மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 127 முதல் 137 இடங்களை பாஜக கைப்பற்றுமாம். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களைத் தாண்டி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமாம்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 59 முதல் 69 இடங்கள்தான் கிடைக்கக் கூடுமாம். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும் பாஜக 73 இடங்களிலும் வென்றிருந்தன.
2018-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதம் 8% அதிகரிக்கும். அதாவது கடந்த தேர்தலில் 38% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 46% வாக்குகளைக் கைப்பற்றுமாம். கடந்த தேர்தலில் 39.30% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 42% வாக்குகளைப் பெறும் என்கிறது .ABP-CVoter கருத்து கணிப்பு.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த நாள் முதலே கோஷ்டி பூசலில் சிக்கித் தவித்தது. முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே தற்போது வரை நீடிக்கும் இந்த கோஷ்டி பூசல், காங்கிரஸின் தோல்விக்கு பிரதான காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications