எனக்கு முதல்வர் பதவி தராம பாஜக ஆட்சியா? 25 எம்.எல்.ஏக்களை வைத்து மிரட்டும் வசுந்தர ராஜே சிந்தியா!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமக்கு 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பலம் இருப்பதை முன்வைத்து மாஜி முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா அரியணை ஏற டெல்லி மேலிடத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே இடைவிடாத மோதலை காங்கிரஸ் மேலிடம் முடிவுக்கு கொண்டு வராமலேயே தேர்தலை சந்தித்தது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆட்சியை காங்கிரஸ், பாஜகவிடம் பறிகொடுத்தது.

பாஜகவைப் பொறுத்தவரை சீனியரும் முன்னாள் முதல்வருமான வசுந்தர ராஜே சிந்தியாவை தொடக்கம் முதலே ஓரம்கட்டித்தான் வைத்தத்து. காங்கிரஸ் உட்கட்சி பூசலால் எளிதாக கிடைக்கும் வெற்றியை வசுந்தர ராஜே புறக்கணிப்பால் இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் பாஜகவுக்கு திடீரென ஏற்பட்டது. இதனால் மீண்டும் சீனுக்கு கொண்டுவரப்பட்டார் வசுந்தர ராஜே. அவரது ஆதரவாளர்களுக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
தற்போது ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. ஆனால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது பாஜக மேலிடம். உத்தரப்பிரதேசத்தை போல சாமியார் மகந்த் பாலக்நாதை பாஜக முதல்வராக்கக் கூடும் என்கிற தகவல்கள் காட்டுத் தீயாக பரவின.
ஆனால் தமக்குதான் முதல்வர் நாற்காலி என்பதில் உறுதியாக இருக்கும் வசுந்தர ராஜே சிந்தியா, தமது ஆதரவு 25 எம்.எல்.ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தி பலத்தையும் காட்டி இருக்கிறார். அத்துடன் வசுந்தர ராஜே சிந்தியா இல்லாமல் போனால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்திருக்காது என்கிற குரல்களை வலுவாகவும் பேச வைத்துக் கொண்டிருக்கிறார் மகாராணி சிந்தியா. ஒருவேளை தமக்கு பதவி கிடைக்காமல் போனால் நிச்சயம் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட அத்தனை வேலைகளையும் செய்யவும் வசுந்தர ராஜே திட்டமிட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி மேலிடம் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications