உதய்பூர் படுகொலையால் பதற்றம்.. ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். அதிமுக்கிய ஆலோசனை..வியூகங்கள் உருவாகும்?
ஜெய்ப்பூர்: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 3 நாள் அதிமுக்கிய ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான உட்கட்சி மோதல்களுக்கு இடையே காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவை 101 எம்.எல்.ஏக்கள். ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இரண்டும் சம வலிமையில் உள்ளன. ஆளும் காங்கிரஸில் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி கோஷ்டியின் குமுறல் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்து டெய்லர் ஒருவரை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் மதமோதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் இத்தகைய மதமோதல்கள் மூலம் வாக்குகளை ஒருமுகப்படுத்துகிற போக்குகள் தொடருகின்றன. அதே பார்முலாவைத்தான் வலதுசாரிகள் இப்போதும் ராஜஸ்தானில் செயல்படுத்துகின்றன.
இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் Muslim Rashtriya Manch அமைப்பானது உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட கன்னையாலால் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற கூட்டங்களை நடத்துகிறது. முஸ்லிம் வாக்குகளையும் தங்கள் வசமாக்கும் யுக்தியுடன் ஆர்.எஸ்.எஸ். இப்படி தமது சிறுபான்மை பிரிவை களமிறக்கி இருக்கிறது.
இந்த பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாட்கள் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமையன்று ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய பதற்ற சூழ்நிலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஆனாலும் இது வழக்கமான கூட்டம் என்கிறது ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications