நீதிமன்றம் அளித்த அடடே தீர்ப்பு.. மனவியை கர்ப்பமாக்க கணவனுக்கு 15 நாள் பரோல்! இது லிஸ்ட்லயே இல்லையே!
ஜெய்ப்பூர் : கணவனின் சிறைவாசத்தால் மனைவியின் பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு, மனைவி கர்ப்பம் தரிக்க ஆணுக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தென்தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை...4 நாட்களுக்கு நீடிக்குமாம் - சென்னை வெயில்தான்
சமீப நாட்களாக பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் சமூக வலைதளங்களில் ஆச்சர்யத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையிலான விசித்திரமான தீர்ப்பு ஒன்றுதான் தற்போது பேசப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பு
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது, அதில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்த் லால் என்பவருக்கு பில்வாரா நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2021ல் அவருக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது. சிறை வளாகத்தில் நந்த் லாலின் நடத்தை மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் தேவைக்கு உரிமை
இந்நிலையில், அவரது மனைவி ரேகா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளதாகவும், இதனடிப்படையில் தனது கணவரை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார். பல காரணங்களுக்காக பரோல் கோரும் மனுக்களுக்கு மத்தியில், பாலியல் தேவை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பரோல் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த அரிதான மனுவானது நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சந்ததியை பெற உரிமை
விசாரணையின்போது, நந்த் லாலின் மனைவி நிரபராதி என்றும், அந்த ஆணின் சிறை தண்டனையால் திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது மனைவியின் பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்கு சந்ததியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது.தண்டனை கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையைப் பறிக்க முடியாது.
சுதந்திரத்தை பறிக்கக் கூடாது
சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. அதன் வரம்பிற்குள் கைதிகளும் அடங்குவர். எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ரிக் வேதம் உட்பட இந்து மத நூல்களை நீதிபதிகள் மேற்கோள் காட்டியதுடன், யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் பிற ஆபிரகாமிய மதங்களின் கொள்கைகளையும் குறிப்பிட்டனர்.