ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு- மனு தள்ளுபடி
ராஜீவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும் ? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Recommended Video
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் காந்தியை கொல்வதற்கு வெடிகுண்டு தயாரித்த தகவல்களை இலங்கை அரசிடமிருந்து பெற்று 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தான் நிரபராதி என்றும், உச்சநீதிமன்றத்தின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசோ இதற்கு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் கடிதம் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்கும்படி உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 1999-ம் ஆண்டு மே 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், தான் நிரபராதி என்றும், உச்சநீதிமன்றத்தின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை அதிகாரி பதிவு செய்யவில்லை
அவர் தனது மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சில தகவல்கள் விடுபட்டிருக்கின்றன. வாக்குமூலத்தில் முக்கிய தகவல்களை விசாரணை அதிகாரி பதிவு செய்யாத காரணத்தினால், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் தன்னையும் இதர 6 பேரையும் குற்றவாளி என 1999-ல் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்பை திரும்ப பெறவேண்டும் என்று கூறியிருந்தார்.
மத்திய அரசு எதிர்ப்பு
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்க எதிர்ப்பு
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தனர். இநிலையில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐயின் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, பிரமாண மனு தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலைச்சதியில் பேரறிவாளனின் பங்கு, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மனு முகாந்திரம் இல்லாதது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலையில் தொடர்பில்லையா?
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பேரறிவாளனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து அவரது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும். வெடிகுண்டு தயாரிக்க முக்கியமாக இருந்ததே அந்த பேட்டரிகள்தான். 9 வாட் பேட்டரியை கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்று டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தெரியாதா?.
தீர்ப்பை மாற்ற வேண்டுமா?
பேரறிவாளன் விடுதலைப்புலிகளின் அனுதாபி. அவருக்கு விடுதலைப்புலி இயக்கத்தினருடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேரறிவாளனை விடுவிக்க முடியாது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தியை கொல்வதற்கு வெடிகுண்டு தயாரித்த தகவல்களை இலங்கை அரசிடமிருந்து பெற்று 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.