வெள்ளம் பாதித்த தமிழகத்துக்கு உரிய உதவிகள் செய்யப்படும்: லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
டெல்லி: லோக்சபாவில் தமிழக வெள்ளம் தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார்.
வடதமிழகத்தைக் குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 40 மணி நேரத்துக்கு அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் சென்னை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக உருமாறிப் போயுள்ளன.

இந்த வெள்ள நிலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று காலை பல்வேறு கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதை விவாதிக்க அனுமதியளிக்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முதலில் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மேலும் பொதுவாக ஒத்திவைப்பு தீர்மானங்கள் தள்ளுபடி செய்யப்படுவதுதான் மரபாக இருந்து வருகிறது; கடந்த 3 வாரங்களாக சென்னை நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது;
தமிழ்நாடு முழுவதும் மழை, வெள்ளத்துக்கு 180-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்; பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருதி இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இன்று விவாதிக்க மத்திய அரசு விரும்புகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
இவ்விவாதத்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். சென்னை மக்களின் துயரத்தை நாடாளுமன்றம் உணர்ந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்யப்படும். தமிழக மீட்புப் பணிக்கு ராணுவம், கடற்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் பாதிப்பால் விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications