அயோத்தியில் ராமர் கோவில்.. அன்று இவர்கள் ஹீரோக்கள்.. இன்று நேரில் வர அனுமதியில்லை!
அயோத்தி: இந்திய வரலாற்றில் இன்று சிறப்பு மிக்க நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பூமி பூஜைக்கான முதல் செங்கல்லை எடுத்துக் கொடுக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்காக முதல் நாளில் இருந்து கடுமையாக உணர்வுகளுடன் உழைத்தவர்களில் பலர் இன்று மறக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்கள் இன்று இந்த மண்ணில் இல்லை.
Recommended Video
கடந்த 1980ம் ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முதல் முயற்சி எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன் ஆகியவர்களை குறிப்பிடலாம்.

ஒரிஜினல் போஸ்டர் பாய்
இந்துத்துவாவில் 'ஒரிஜினல் போஸ்டர் பாய் ' என்று அழைக்கப்பட்டவர் அத்வானி. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று முதல் அஸ்திரத்தை தூக்கிப் போட்டார். 1990ஆம் ஆண்டில் குஜராத்தில் இருக்கும் சோம்நாத் கோயிலில் இருந்து அயோத்தியில் இருக்கும் ராம ஜென்ம பூமி வரை ரத யாத்திரை நடத்தியவர்.
நாடு முழுவதும் பயணித்தார். முதலில் டொயோட்டா காரில் சென்று பின்னர் ரதத்தில் சென்றார். இவர் ரத யாத்திரை சென்று கொண்டு இருக்கும்போது பீகாரில் இருக்கும் சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டார். இவரது கைதை அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் சொல்லியே செய்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1992ஆம் ஆண்டில் மீண்டும் இவர் அயோத்திக்கு வந்தார். அங்கிருந்த மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி இடிக்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக இவரை அழைத்து இருந்தது. அதை ஏற்று வந்தார். பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது. இதுகுறித்த சதி வழக்கு இன்னும் அவர் மீது இருக்கிறது. விசாரணையும் நடந்து வருகிறது.

பாஜக பொதுச் செயலாளர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் பிரலமாக வளர்ந்து வந்தவர் பிரமோத் மகாஜன். முதலில் நடை பயணம் செல்வதற்கு அத்வானி முடிவு செய்து இருந்தார். பிரமோத் மகாஜன் கேட்டுக் கொண்ட பின்னர் நடை பயணத்தை கைவிட்டு ரத யாத்திர சென்றார். 1990ல் பாஜகவின் பொதுச் செயலாளராக பிரமோத் இருந்தார். பாஜகவின் கொள்கைகளில் தீர்க்கமாக இருந்த தீன தயாள் உபத்யாய்யின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அல்லது மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி ரத யாத்திர செல்ல வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர். இதில் செப்டம்பர் 25 அன்று ரத யாத்திரை செல்லலாம் என்று அத்வானி தீர்மானித்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, 10,000 கி. மீட்டர் ரத யாத்திரை செல்வதற்கான திட்டத்தை பிரமோத் கொண்டு வந்தார்.

விஷ்வ இந்து பரிஷத்
விஷ்வ இந்து பரிஷத் என்றாலே நினைவுக்கு வருபவர் அசோக் சிங்கால். நாட்டிற்கு விஷ்வ இந்து பரிஷத் என்றால் என்ன, இதன் முக்கியத்துவம் என்ன என்பதை எடுத்து சென்றவர். அயோத்தியில் ராமர் கோயில் எழும்புவதற்கும், அதன் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தவர் இவர் என்று கூறலாம். 2011 ஆம் ஆண்டு வரை இவர்தான் விஹெச்பியின் தலைவராக இருந்தார். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் 2015ஆம் ஆண்டில் காலமானார்.

அத்வானியுடன் ஜோஷி
1980 முதல் 1990 வரை இவர் பாஜகவின் பேராசிரியராக இருந்தார் என்று கூறலாம். 1992 ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியுடன் முரளி மனோகர் இருந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் உமா பாரதியை அரவணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய புகைப்படங்கள் அப்போது பெரிதும் பேசப்பட்டது.

பெண் துறவி
ராமர் கோயில் கட்டுவதற்கு முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். பெண் துறவியாக இருக்கும் இவர் கடந்த மோடி அரசில் அமைச்சராக இருந்தவர். ஆர்எஸ்எஸ், பாஜகவில் செல்வாக்கு பெற்ற பெண் தலைவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இவரும் அத்வானியுடன் இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்த உமா பாரதி ராமர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. அனைவருக்கும் உரியவர் என்று கூறி இருந்தார்.

இந்துத்துவா
இந்துத்துவாவில் வெறியாக இருந்தவர் சாத்வி ரிதம்பரா . இவர் ராமர் ஜென்ம பூமி விவகாரம் தலை தூக்குவதற்கு முன்பு இருந்தே இந்துத்துவா குறித்து வெறித்தனமாக பேசி வந்தவர். அனல் பறக்க இவர் பேசி இருந்த வீடியோக்கள் பெரிய அளவில் விற்றுத் தீர்ந்தன. உமா பாரதிக்கு அடுத்து பாஜகாவில் பேசப்படும் அடுத்த பிரபல பெண் துறவி இவர்.

பாஜக முதல்வர்
உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங். அந்த மாநிலத்தின் முதல்வராக 1992, டிசம்பர் 6ஆம் தேதி இவர் இருந்தபோதுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தவர். பின்னர் பாஜகவுடன் நெருடல் ஏற்பட்டு தனியாக கட்சி துவக்கினார். சிறிது காலத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

பஜ்ரங் தளம்
பஜ்ரங் தளத்தின் தீவிர பேச்சாளர் வினய் கத்தியார் என்று இவரைக் கூறலாம். 1984 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இவர்தான் இந்த அமைப்பின் முதல் தலைவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஊக்கம் அளித்தவர். பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1992க்குப் பின்னர் பெரிய தலைவராக பாஜகவில் உருவெடுத்தார். ராஜ்ய சபை மற்றும் லோக் சபைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஃபாசியாபாத்தில் இருந்து லோக் சபைக்கு சென்றார்.

விஷ்வ இந்து பரிஷத்
இவரும் இந்துத்வாவின் மிகப் பெரிய பேச்சாளராக இருந்தார். விஷ்வ இந்து பரிஷத்தில் அசோக் சிங்காலுக்குப் பின்னர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அத்வானிக்கு பாஜகவில் செல்வாக்கு குறைய குறைய இவருக்கும் செல்வாக்கு குறைந்தது.

தொழில் அதிபர்
விஷ்ணு ஹரி டால்மியா தொழில் அதிபர். இந்துத்துவா கொள்கைகளில் பிடிப்பு கொண்டவராக இருந்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஷ்வ இந்து பரிஷத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபர் மசூதி இடிப்பில் இவரது பெயரும் புகாரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் 2019 ஆம் ஆண்டில் டெல்லியில் இருக்கும் தனது வீட்டில் 91 வயதில் காலமானார்.












Click it and Unblock the Notifications