5 ஆண்டுகள் பெட்ரோலிய அமைச்சராக இருந்து உ.பி. ஆளுநரான ராம்நாயக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத். சத்தீஸ்கர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாயக், வாஜ்பாய் அரசில் 5 ஆண்டுகாலம் பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பல்ராம்தாஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.
மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற உடன் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில ஆளுநர்கள் பதவி விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் உத்தரப்பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கர் மாநில ஆளுநர்கள் பதவி விலகினர். ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன், கோவாவின் ஆளுநர் வான்சூ ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் மிசோரம் ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமன் தமது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால், மிசோரம் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், நாகலாந்து, சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நேற்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

ராம்நாயக்
உத்தரபிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாயக் (வயது 80), வாஜ்பாய் அரசில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்நாயக். ஒரே அரசில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பெட்ரோலிய இலாகாவை வகித்த ஒரே நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்நோயில் இருந்து போராடி மீண்டார். அதன்பிறகுதான், மத்திய அமைச்சர் பதவியை வகித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கடந்த ஆண்டே அவர் அறிவித்தார்.

கேசரிநாத் திரிபாதி
மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கேசரிநாத் திரிபாதி, உத்தரபிரதேச மாநில சட்டசபையில் முன்னாள் சபாநாயகர் ஆவார். மாணவ பருவத்தில் காஷ்மீர் பிரச்சினைக்காக போராடி சிறை சென்றுள்ளார். 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

ஓம்பிரகாஷ் கோஹ்லி
குஜராத் ஆளுநராக ஓம்பிரகாஷ் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். 78 வயதான இவர் டெல்லி மாநில பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். பாரதிய ஜனதாவின் மாணவர் பிரிவு தலைவராகவும், டெல்லி பல்கலைக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். 1994 முதல் 2000-ம் ஆண்டு வரை, ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார்.

பல்ராம்தாஸ் தாண்டன்
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம்தாஸ் தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். 1969-ம் ஆண்டு, பஞ்சாப் மாநில துணை முதல்வராக இருந்தார். பிறகு, பிரகாஷ்சிங் பாதல் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தார். 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

பாலகிருஷ்ண ஆச்சார்யா
நாகாலாந்து மாநில ஆளுநராக பத்மநாபா பாலகிருஷ்ண ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாரதிய ஜனதாவின் வடகிழக்கு பிராந்திய பணிக்குழுவின் உறுப்பினர் ஆவார். மேலும் பாரதிய ஜனதாவின் வெளிநாடுவாழ் நண்பர்கள் அமைப்பின் துணை அமைப்பாளராகவும் உள்ளார்.












Click it and Unblock the Notifications