பாலியல் பலாத்கார குற்றவாளி சாமியார் ராம் ரஹீம் ஹைதராபாத் சொத்தும் முடக்கம்!
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீமுக்கு சொந்தமான ஹைதராபாத் சொத்துகளும் முடக்கப்பட்டன.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்துக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு முடக்கினர். மேலும், பெங்களூருவில் இருக்கும் ஆசிரமத்தையும் இழுத்து மூடினர்.
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சாமியார் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் போட்டனர். இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுச் சொத்துக்களை தீ வைத்து எரித்து நாசப்படுத்தினர். இதனால் இரு மாநிலங்களிலும் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாமியாரின் ஆசிரமத்தின் சொத்துக்களை முடக்கி அதிலிருந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹைதராபாத் நிலம்
இதையடுத்து ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமமான தேரா சச்சா சவுதாவின் பெயரிலுள்ள சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி வருகின்றனர். இந்த அமைப்புக்கு ஹைதராபாத் அருகே 55 ஏக்கர் நிலம் உள்ளது.
8 ஆண்டுகளில் வாங்கப்பட்டது
இந்த நிலத்தை சாமியார் ராம் ரஹீம் சிங்கின் பக்தர் ஷ்யாம்லால் என்பவர் பாதுகாத்து வருகிறார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த 55 ஏக்கர் நிலம் 2007-15ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் வருகை
சாமியார் ராம் ரஹீம் சிங், ஹைதராபாத்துக்கு 2002ஆம் ஆண்டிலிருந்து பலமுறை வருகை புரிந்துள்ளதாக ஷ்யாம்லால் கூறினார். இறுதியாக சாமியார் 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் வந்ததாக ஷ்யாம்லால் கூறினார்.
பெங்களூரு ஆசிரமம்
அதேபோல் பெங்களூருவில் ருக்மணி நகரில் 'தன் தன் சத்குரு' என்னும் பெயரில் ஒரு ஆசிரமம் இயங்கி வந்தது. அதனை நான்கு பேர் பராமரித்து வந்தனர். தற்போது அந்த ஆசிரமத்தில் இருப்பவர்களை வெளியேற்றி, ஆசிரமத்தை மூடிவிட்டதாக காவல்துறை உயர் அதிகாரி சேத்தன் ரத்தோர் கூறினார்.