மெட்ராஸ் ஐஐடி மாநாட்டிற்கு வரமுடியாது.. கடைசி நேரத்தில் விலகிய பாபா ராம்தேவ்.. என்ன காரணம்?
மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாட்டிற்கு வர இயலாது என்று பாபா ராம் தேவ் அறிவித்து இருக்கிறார்.
சென்னை: யோகா குரு பாபா ராமதேவ் மருத்துவம் குறித்த தவறான தகவலை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். இவர் நிறுவன பொருட்கள் எல்லா விதமான நோயையும் குணப்படுத்தும் என்று கூறி இவர் வைரல் ஆகி இருக்கிறார்.
இதன் காரணமாகவே இவரின் நிறுவனமான பதஞ்சலியும் இந்தியா முழுக்க பிரபலம் ஆனது. மிகவும் சின்ன நிறுவனமாக இருந்த இது தற்போது விருட்சம் போல வளர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாடு ஒன்றிற்குப் பாபா ராம் தேவ் அழைக்கப்பட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. தற்போது இதில் கலந்து கொள்ளவில்லை என்று பாபா ராம் தேவ் அறிவித்து இருக்கிறார்.

ஆரம்பம்
பாஜக கட்சியைச் சேர்ந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா என்பவர் ''கேன்சர் ஏற்பட காரணம், முன்வினை தீமை தான்'' என்றார். இதற்கு ஆதரவு அளித்து பாபா ராமதேவ் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது ''கேன்சர் என்பது முன்ஜென்மத்தில் செய்த தீமையால் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் நீங்கள் அதிக தவறு செய்தாலும் கேன்சர் ஏற்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஐஐடி
இந்த நிலையில் மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாடு ஒன்றிற்குப் பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டு இருந்தார். இது கேன்சர் விழிப்புணர்வு மற்றும் தீர்வு குறித்த உலக மாநாடு என்பதுதான் முக்கியமான விஷயம். இந்த மாநாடு நேற்றில் இருந்து 11ம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

பிரச்சனை
இவர் வருகைக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். கேன்சரை குறித்து தவறான புரிதல் கொண்ட நபரை எப்படி அழைக்கலாம் என்று கேட்டார்கள். இது விழா நிர்வாகிகள் முடிவு என்று அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் பேட்டி அளித்து இருந்தார்கள்.

இல்லை
இந்த நிலையில் தற்போது ஐஐடி நடத்தும் மாநாட்டிற்கு வர இயலாது என்று பாபா ராம் தேவ் அறிவித்து இருக்கிறார். பல்வேறு முக்கிய பணிகள் இருக்கிறது என்று கூறியுள்ளார். பாபா ராம்தேவ் மெயில் மூலம் இந்த தகவல் ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications