"உ.பி.யில் மட்டும்தானா? எல்லா இடத்திலும்தான் பலாத்காரம் நடக்கிறது"- அகிலேஷ் அலட்சிய பதில்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மட்டும்தான் பலாத்காரம் நடக்கிறதா, போய் கூகுளில் சர்ச் செய்து பாருங்கள் உலகமெங்கும் இப்படித்தான் நடக்கிறது என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.
உ.பியில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாயில் ஆசிட் ஊற்றி பெண் கொல்லப்பட்டார். உச்சகட்டமாக, பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
உ.பி.யில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் மோசமான சம்பவங்கள் நடப்பதால் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகள், மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. நாடு முழுவதும் நடைபெறும் பலாத்கார சம்பவம் குறித்த புள்ளி விவரத்தை என்னால் கொடுக்க முடியும். இது கூகுள் காலம்.
தேவைப்பட்டால் கூகுளில் சென்று தேடிப்பாருங்கள், எத்தனை சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளன என்ற விவரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் உ.பியில் நடைபெறும் பலாத்காரத்தை மட்டுமே ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன.
சகோதரிகள் பலாத்காரம் உட்பட எந்த சம்பவமாக இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கையை எடுத்துதான் வருகிறது. சகோதரரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று, மாநில அரசே கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு ஹெல்ப் லைன்களை திறந்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் நிருபர் ஒருவர் அகிலேஷ் யாதவிடம், மாநிலத்தில் நடைபெற்றுவரும் பலாத்கார சம்பவங்கள் குறித்து கேட்டபோது, "உங்களை யாரும் பலாத்காரம் செய்யவில்லையே, நீங்கள் நல்லாதானே இருக்கிறீர்கள். அப்புறம் ஏன் அதையே கேட்கிறீர்கள்" என்று அகிலேஷ் பதில் அளித்திருந்தார்.
அவரது தந்தையும் சமாஜ்வாதி தலைவருமான முலாயம்சிங் யாதவ், இளைஞர்கள் வயது கோளாறில் தவறுதலாக இதுபோல நடந்துகொள்ளுவதாக ஏற்கெனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications