கர்நாடகாவில் ராகுல் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டி: சதானந்த கவுடா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் சனாதந்த கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் சதானந்த கவுடா கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் மைசூர், உடுப்பி, சிக்மகளூர் உள்ளிட்ட எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் நான் போட்டியிடுவேன்.
பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நான் உள்பட 6 பேர் விருப்பம் தெரிவித்துள்ளோம். நடப்பாண்டு கர்நாடக சட்டசபை கூட்டத் தொடர் 7 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.
இது குறைந்தபட்சம் 15 நாட்களாவது நடத்தப்பட வேண்டும். அதிக நாள்கள் கூட்டத் தொடர் நடைபெறுவதை அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் விரும்புவதில்லை.
அவர்களுக்கு ஆட்சி நடத்துவது தொடர்பான எந்தத் திறமையும் இல்லாததே இதற்கு காரணம். முதல்வர் சித்தராமையா ஆண்டுக்கு 60 நாள்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். ஆனால், அவர் கூறியதை என்றைக்குமே நிறைவேற்றமாட்டார்.
நான் முதல்வராகப் பணியாற்றிய போது, சகாலா திட்டத்தில் 4 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், ஊழல்கள் 50% குறைந்தன. தற்போது காங்கிரஸ் அரசில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.